அரசியல் களமாகும் வேலூர் கோட்டை மசூதி
வேலூர், மார்ச் 4: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன.
வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிட பல்வேறு போராட்டத்தை வேலூர் மக்கள் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலைக்கு மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா இதற்கு சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் அடிப்படையில் 1981-ம் ஆண்டு கோயிலை வழிபாட்டுக்கு திறந்துவிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்திலேயே 1750-ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியையும் வழிபாட்டுக்கு திறந்து விடலாம் என்ற முடிவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. அப்துல் சமது, ஆடிட்டர் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அருகிலேயே ஹிந்து கோயில் உள்ளதால், மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மசூதியில் வழிபாடு வேண்டாம் என்று கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர்.
எனவே 1981 மார்ச் 16-ம் தேதி சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதிட்சை செய்து வழிபடத் தொடங்கினர்.
மசூதியை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு திறந்துவிட வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் இக்பால் இதுகுறித்து கூறியதாவது:
எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தபோது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவக்குமார், மசூதி தொடர்பான ஆவணங்களைக் காட்டி, இங்கு தொழுகை வேண்டாம் என்று முஸ்லிம் பெரியவர்களே எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பார்த்தவுடன், காரணம் இல்லாமல் பெரியவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று அந்த கோரிக்கையை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டோம்.
தற்போது தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார். அவர் நேரடியாக முதல்வரிடம் பேசி மசூதியை தொழுகைக்கு சுமுகமாக திறந்து விடட்டும். அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்யட்டும். அதைவிடுத்து பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல என்றார்.
இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, முஸ்லிம் பெரியவர்களே பிரச்னை கூடாது என்று முடிவு செய்துள்ள நிலையில் த.மு.மு.க. இப்பிரச்னையை கையிலெடுத்துள்ளது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னதாகவே இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080304232602&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&dName=%FAY%DB%F4o&Dist=-17